யாகூ-இந்தியா மாநில மொழிகளில் தனது தளத்தை துவக்கியதை குறித்து சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தேன். அதன் மலையாள மொழித் தளத்தில் சில மலையாள வலைப்பதிவுகளின் இடுகைகளை வலைப்பதிவரின் அனுமதி பெறாமல் வெளியிட்டு கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை யாகூ நிறுவனத்துக்கு எடுத்து சென்ற போது, Web dunia நிறுவனம்தான் வெளியிடப்படும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும்
பொறுப்பேற்றிருப்பதால் அவர்களிடம்தான் இது குறித்து பேசவேண்டும் என்றிருக்கிறார்கள். சுடப்பட்ட கருத்துக்களை கொண்ட இணைய பக்கங்களை மட்டும் தளத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். சம்பந்தபட்ட Web dunia நிறுவனமோ வலைப்பதிவர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பதோடு, குறிப்பிட்ட வலைப்பதிவர்களுக்கு சன்மானமும் வழங்க ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட பதிவர்களோ யாகூ மன்னிப்பு கேட்டலொழிய இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள். மார்ச் 5ம் தேதியன்று யாகூ-இந்தியாவுக்கு எதிராக மிக நூதனமான முறையில் போராட முடிவெடுத்திருக்கிறார்கள். மார்ச் 5ல் யாகூக்கெதிரான கண்டனங்களை வலைப்பதிவில் அவரவர் வலைப்பதிவில் வெளியிடுவதன் மூலம் இணைய உலகில் யாகூவிற்கு ஒரு கரும்புள்ளியை உருவாக்க அழைக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த வலைப்பதிவின் பாடல் விமர்சனத்தை அப்படியே உள்வாங்கி ரீடிப்தளம் வெளியிட்டு, பின்னர் மன்னிப்பு கோரியது. உண்மையைச்சொன்னால் யாகூ சுட்ட வலைப்பதிவிலிருந்த(/இருக்கும்) சமையல் குறிப்புக்களையோ, ரீடிப் சுட்ட வலைப்பதிவின் பாடல் விமர்சனத்தையோ விட சிறப்பாக அவர்களாலேயே எழுதியிருக்க முடியும் அல்லது இந்த வலைப்பக்கங்களின் கருத்துக்கள் மிகச்சிறப்பானதாக தோன்றினால் பதிவர்களை தொடர்பு கொண்டிருந்தால் மிக சந்தோஷமாக அனுமதி கொடுத்து தங்கள் வலைப்பக்கத்திலும் அது குறித்த இரண்டு/மூன்று பதிவுகளை எழுதி சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால் வாசகர்களை திருப்திபடுத்த நினைக்கும் அவசரம், எழுத்துக்களுக்கும் காப்புரிமை என்பதையெல்லாம் பெரிதாக நினைக்காத அலட்சியம் இது போன்ற தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
அதேவேளையில் பதிவர்களுக்கும் இதே பொறுப்பு இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பத்திரிக்கை துறையை சார்ந்த ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்களின் பத்திரிக்கையில் வெளிவந்த சில செய்திகளையும், புகைப்படங்களையும் எந்த வித முன் அனுமதியோ/ பதிவில் அது குறித்த எந்த வித creditஓ செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார். வலைப்பதிவர்களை பொறுத்தளவில் பெரிய ஊடகங்களின் வந்த செய்திகளை பயன்படுத்த முன் அனுமதி பெற காத்திருக்க முடியாது (அதே வாசகர்களை திருப்திபடுத்தும் அவசரம்!!). அதேவேளையில் அந்த செய்திக்கான சுட்டியை நிச்சயம் வழங்க இயலும்.
சமீபத்தில் (!!!) ஒரு திரைப்பட விமர்சன பதிவை படிக்கும்போது, அதன் பாடல் குறித்த விமர்சனங்களை படித்த போது எங்கேயோ ஏற்கனவே படித்த மாதிரி எனக்கு தோன்றியது. அந்த படத்தின் பாடல் குறித்து அதற்கு சில வாரங்களுக்கு முன் நான் எழுதிய பதிவிலிருந்து அப்படியே சுட்டிருந்தார் அந்த நண்பர்/நண்பி. பின்னூட்டத்தில் அது குறித்து எழுதி embarrass செய்ய வேண்டாம் என நினைத்துகொண்டு, நம்ம எழுதியதையும் படிச்சிருக்காரேனு நினைத்து திருப்தி பட்டதோடு நிறுத்திக்கொண்டேன்.
தொடர்புள்ள சுட்டி:
1. வலைப்பதிவுகளின் Copyright Violationகளுக்காக தொடங்கப்பட்டிருக்கிற பிரத்யோக வலைப்பதிவு


